சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மேலும் 9 நீதிபதிகள்.. இன்று பதவி ஏற்பு !!
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மேலும் 9 நீதிபதிகள்.. இன்று பதவி ஏற்பு !!
சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக உள்ள கோவிந்தராஜுலு சந்திரசேகரன், வீராசாமி சிவஞானம், கணேசன் இளங்கோவன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சதிகுமார் சுகுமார குரூப், முரளிசங்கர் குப்புராஜு, மஞ்சுளா ராம்ராஜு நல்லையா, தமிழ்ச்செல்வி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் ஒப்புதல் அளித்து இருந்தது.
இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக 9 பேரும் இன்று பதவி ஏற்க உள்ளனர். 2020 டிசம்பர் 3ஆம் தேதி கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றவர்கள் கடந்த வாரம் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதாவது, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில், வழக்கறிஞர்களாக இருந்த என்.மாலா, சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு, எஸ்.சௌந்தர், அப்துல் ஹமீத், ஆர்.ஜான் சத்யன் ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி பரிந்துரைத்தது. இதில் சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இவர்களின் நியமனங்கள் மூலம் நீதிபதிகள் எண்ணிக்கை 58ஆக உயர்ந்து, காலியிடங்கள் 17ஆக குறைய உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒதுக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75ஆகும்.
newstm.in