புதிதாக 9,494 ஆசிரியர்கள் தேர்வு.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!
புதிதாக 9,494 ஆசிரியர்கள் தேர்வு.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!
தமிழக சட்டப்பேரவையில் இன்று பள்ளி, கல்லூரி தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது:
“அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து 53 லட்சமாக அதிகரித்துள்ளது. அரசு தொடக்கப் பள்ளிகளில் ரூ.150 கோடி செலவில் 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.
அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்ப பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022 - 2023-ம் கல்வி ஆண்டில் இருந்து ரூ.200 தனி கட்டணம் வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும்.
கிராம, நகர பகுதிகளில் நூலக சேவை பெறாத இடங்களில் நூலக நண்பர்கள் என்ற புதிய திட்டம், தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்படும்.
மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடப்பாண்டில் 9,494 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 15,000 ஆசிரியர் காலியிடம் இருந்தாலும், நடப்பாண்டில் 9,494 பேர் புதிதாக தேர்வு செய்யப்படுவர்” எனத் தெரிவித்தார்.