கொரியரில் வந்த 97 வாள் பறிமுதல்.. போலீசார் தீவிர விசாரணை..!
கொரியரில் வந்த 97 வாள் பறிமுதல்.. போலீசார் தீவிர விசாரணை..!
சமீபத்தில், பஞ்சாப்பில் இருந்து அவுரங்காபாத்திற்கு கூரியரில் அனுப்பப்பட்ட 37 வாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து புனே போலீசார், கூரியரில் வரும் பார்சல்களை கவனமாக ஸ்கேன் செய்ய கூரியர் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு இருந்தனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து பிம்பிரி சிஞ்ச்வட்டில் உள்ள கூரியர் நிறுவனத்துக்கு 2 மரப்பெட்டிகள் வந்தன. கூரியர் நிறுவனம் அந்த பெட்டிகளை ஸ்கேன் செய்தபோது, அதில் வாள்கள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், கூரியரில் வந்த மரப்பெட்டியில் இருந்த 92 வாள்கள், 2 பட்டாக் கத்தியை பறிமுதல் செய்தனர்.
மேலும், பார்சலை அனுப்பிய அமிர்தசரசை சேர்ந்த உமேஷ் சூட், பார்சலை பெற இருந்த அவுரங்காபாத்தை சேர்ந்த அனில் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல மற்றொரு கூரியரில் அமிர்தசரஸில் இருந்து அகமதுநகரைச் சேர்ந்தவருக்கு வந்த 5 வாள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், இந்த வாள்கள் அதிக எண்ணிக்கையில் எதற்காக பஞ்சாப்பில் இருந்து புனேக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.