ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கார்.. 9 பேர் பலி.. ஒருவர் உயிருடன் மீட்பு..!
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கார்.. 9 பேர் பலி.. ஒருவர் உயிருடன் மீட்பு..!
உத்தரகாண்ட் மாநிலம் தேலா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட காரில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியைச் சேர்ந்த 10 பேர் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றனர். ராம்நகரில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த இவர்கள், இன்று காலை 5.45 மணி அளவில் தேலா ஆற்றின் வழியாக காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால், கார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட காரை கிரேன் உதவியுடன் வெளியே எடுத்தனர்.
இந்த விபத்தில், காரில் இருந்த 10 பேரில் 3 இளைஞர்கள், 6 பெண்கள் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஒருவர் ராம்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இறந்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.