தூத்துக்குடியில், பனை மரம் முறிந்து விழுந்து பலியான குழந்தையின் வீட்டிற்கு நேரில் சென்ற எம்பி கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

தூத்துக்குடி கே.வி.கே.நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருடைய மகள் முத்து பவானி. ஒரு வயது குழந்தையான முத்து பவானி நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு தனது அத்தை ராஜேஸ்வரி (40) என்பவருடன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக பலத்த காற்று வீசவே அருகில் நின்ற பனை மரம் முறிந்து குழந்தை மற்றும் ராஜேஸ்வரி மீது விழுந்து அமுக்கியது.

இதில் குழந்தை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. ராஜேஸ்வரி பலத்த காயம் அடைந்தார். அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் இறந்த குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

தொடர்ந்து, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கினர். மேலும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ராஜேஸ்வரியையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அவருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினர்.