25 ஆண்டுகளாக குழந்தை இல்லாத பெண்ணுக்கு 50 வயதில் இரட்டை குழந்தை..!

25 ஆண்டுகளாக குழந்தை இல்லாத பெண்ணுக்கு 50 வயதில் இரட்டை குழந்தை..!

Update: 2022-05-26 13:21 GMT

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிறப்பு சிகிச்சைகளின் பயனாக, 50 வயது பெண்ணுக்கு இரட்டை ஆண் குழந்தைகளும், 47 வயது பெண்ணுக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளன.

சென்னையை சேர்ந்தவர் ராதிகா (50). திருமணமாகி 25 ஆண்டுகளாக குழந்தை இல்லை. பணம் சேர்த்து வைத்து தனியார் குழந்தையின்மை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கருத்தரித்துள்ளார்.

ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த போது கால்கள் வீக்கம் அடைந்து, நெஞ்சில் நீர் கோர்த்த நிலையில் எழும்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்களின் ஆலோசனைப்படி, மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

கருவில் இருந்த குழந்தையின் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், அதற்கான சிகிச்சை மற்றும் குழந்தையின் நுரையீரல், மூளை வளர்ச்சிக்கு தேவையான மருந்துகள் கொடுக்கப்பட்டு, 32 வாரத்தில் குறைமாத பிரசவத்தில், அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்தது.

இதில் அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், ஒரு மாதத்திற்கு 'இன்குபேட்டர்' கருவியில் வைத்து, குழந்தைகள் பராமரிக்கப்பட்டன. தற்போது, தாயும் குழந்தைகளும் நலமுடன் உள்ளனர்.


அதேபோல, 47 வயதான வள்ளி என்பவருக்கு 17 ஆண்டுகளாக குழந்தை இல்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் கரு நிலைத்தது.

இவருக்கு எட்டாவது மாதத்தில் கால்களில் வீக்கமும், ரத்தக் கொதிப்பும் ஏற்பட்டதால், எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவருக்கும் அறுவை சிகிச்சை மூலம் குறை மாதத்தில் பிரசவம் நடந்தது. பிறந்த பெண் குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.

‘இன்குபேட்டர்' கருவி உதவியுடன் பராமரிக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம், குழந்தையின் எடையும் அதிகரித்தது. மேலும், வள்ளியின் ரத்தக் கொதிப்பும் சரி செய்யப்பட்டது.

Similar News