பெண்ணை தாக்கிய அதிமுக நிர்வாகி.. 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

பெண்ணை தாக்கிய அதிமுக நிர்வாகி.. 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Update: 2022-02-26 05:55 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சேவகன் தெருவைச் சேர்ந்தவர் சித்ரா தேவி. இவர், கறம்பக்குடி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது; “நான், என் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன்.

என் பக்கத்து வீட்டுக்காரரான பெரியான் என்பவரின் மகன் செல்வராஜ் என்பவர், அவருடைய மனைவி தேர்தலில் நின்றபோது ஓட்டு கேட்டிருந்தார்.

நாங்களும் ஓட்டு போட்டோம். ஆனால், நாங்கள் அவருக்கு ஓட்டு போடவில்லை என்று, எங்கள் வீட்டில் வந்து என் கணவர் இல்லாத நேரத்தில் என்னை தகாத வார்த்தைகளால் பேசினார். நான் பயந்துபோய் எதுவும் பேசாமல் நின்றேன்.


மறுநாள் காலை (24ம் தேதி) 9 மணி அளவில் வெளியே சென்ற என்னை வழிமறித்து, ‘எனக்கு ஓட்டு போடவில்லை. ஆனால், என் நிலத்தின் வழியாக ஏன் செல்கிறாய்..?’ என்று, என்னை செருப்பால் அடித்து கீழே தள்ளியும் என் சட்டையை கிழித்தும், கையால், முதுகில் அடித்தும், கேவலமான வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்ததோடு, என் கன்னத்தில் அறைந்ததில் என் இடது பக்க காதில் அணிந்திருந்த கம்மல் உடைந்து கீழே விழுந்து விட்டது.

அத்துடன், கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினும் அறுந்து எங்கு விழுந்தது என்று தெரியவில்லை. கீழே விழுந்த நான் எழுவதற்குள் என்னை எழ விடாமல் மீண்டும் மீண்டும் உதைத்தார். ஆகவே எனக்கு தக்க தீர்வு வேண்டி, செல்வராஜ் என்பவரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வராஜ் அந்தப் பகுதி அதிமுகவின் வட்டச் செயலாளராக உள்ளார். 2-வது வார்டில் போட்டியிட்ட அவருடைய மனைவி வசுந்தரா ராணி தோல்வி அடைந்துள்ளார்.

அந்த ஆதங்கத்தில் சித்ராதேவியை செல்வராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது. செல்வராஜ் மீது 294B, 506(1), 341, 355 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள கறம்பக்குடி போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

Similar News