அதிமுக பொதுக்குழு சிறுபிள்ளை தனமாக நடந்தது.. முன்னாள் எம்.பி. கடும் விமர்சனம்
அதிமுக பொதுக்குழு சிறுபிள்ளை தனமாக நடந்தது.. முன்னாள் எம்.பி. கடும் விமர்சனம்
அதிமுக பொதுக்குழு பெரும் பரபரப்புகளுக்கு, சர்ச்சைகளுக்கு இடையில் நடந்து முடித்துள்ளது. இதில் ஓ.பன்னீர்செல்வம் அவமானப்படுத்தப்பட்டார் என்றும் இதுவரை அதிமுகவில் இப்படியொரு நிகழ்வு நடந்ததுஇல்லையென்றும் விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் பொதுக்குழு தொடர்பாக கோவையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு வீரம், விவேகம் இருக்க வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடன் இருப்பவர்களுக்கு இந்த இரண்டும் இல்லை. இன்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் அவர்கள் நடந்து கொண்ட விதம் சிறு பிள்ளைதனமான நடவடிக்கைகளாக தான் பார்க்க முடியும்.
23 தீர்மானங்களை ஒட்டு மொத்தமாக நிராகரித்து விட்டு அடுத்த பொதுக்குழு தேதியை அறிவித்து இருக்கின்றார்கள். குறைந்தபட்ச அறிவும், புத்திசாலித்தனமும் இருந்திருந்தால் 23 தீர்மானங்களையும் சேர்த்து அடுத்த பொதுக்குழுவில் விவாதித்து கொள்கின்றோம் என்று சொல்லி இருக்கலாம், சில தவிர்க்க முடியாத, நீதிமன்ற சட்டமன்ற நடைமுறைகள் காரணமாக பொதுக்குழு ஒத்திவைக்கப்படுகின்றது என சொல்லி இருக்கலாம்.
அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் மகிழ்வடைகின்ற வகையில் பக்குவமாக, நிதானமாக உரிய தலைமை பண்புடன் சொல்லி இருக்கலாம். மனித வெடிகுண்டு போல கே.பி.முனுசாமியும், மாஃபா பாண்டியராஜனும் ஓபிஎஸ் அணியில் இருந்து எடப்பாடி அணிக்குள் அனுப்பிவைக்கப்பட்டு இருக்கின்றனர், அவர்கள் தங்கள் வேலையை கனச்கச்சிதமாக செய்து கொண்டு இருக்கின்றனர், என விமர்சித்துள்ளார்.
newstm.in