மக்களிடம் மிளிர்ந்த தலைவர் அப்துல் கலாம்.. இன்று அவரது நினைவு தினம் !

மக்களிடம் மிளிர்ந்த தலைவர் அப்துல் கலாம்.. இன்று அவரது நினைவு தினம் !;

Update: 2022-07-27 09:05 GMT


நாளைய இந்தியாவை வளமானதாகவும், அறிவியல் சிந்தனையோடும் வளர்த்தெடுக்க வேண்டும் என்று விரும்பியவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இளைஞர்களே கனவு காணுங்கள் என முழங்கியவர். இளைய தலைமுறையினரிடம் உரையாடும்போதெல்லாம் தொடர்ந்து இதை வலியுறுத்தி வந்தார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் மறைந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. இன்றும் நாம் அவரைக் கொண்டாடுகிறோம்; அவரது பொன்மொழிகளை நினைவுகூர்கிறோம். இதுவரையிலான குடியரசுத் தலைவர்களில் மிகவும் நேசிக்கப்பட்டவரான டாக்டர் அப்துல் கலாம், இந்திய ஏவுகணைத் திட்டங்களின் கதாநாயகரும்கூட.

அவர் பதவியில் இருந்தபோதும், இல்லாதபோதும் அசாதாரணமான புகழ்வட்டம் அவரைச் சூழ்ந்திருந்தது. பலதரப்பட்ட பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மத்தியிலும் அவர் எளிமையையே கடைபிடித்தார். அவரது பெருந்தன்மை, வெளிப்படையாகப் பேசும் குணம், நகைச்சுவை உணர்வு ஆகியவற்றை விளக்கவே முடியாது. அவர், மனிதநேயம், அறிவாற்றல், நன்னடத்தை ஆகியவற்றால் அனைத்துத் தரப்பு மக்களையும் வசீகரிப்பவராக மிளிர்ந்தார்.

தலைசிறந்த விஞ்ஞானி, மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர் என்பதை எல்லாம் தாண்டி மிகச் சிறந்த மனிதராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.  1931 ஆம் ஆண்டு  அக்டோபர் 15  ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார் அப்துல்கலாம்.  ராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை முடித்தார். 


2015 ஆம் ஆண்டு  ஜூலை 27 ஆம் தேதி ஷில்லாங் பகுதியில் மாணவர்கள் மத்தியில் பேசி கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக அப்துல் கலாம் உயிரிழந்தார். மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவது என்றால் அப்துல் கலாம்க்கு அவ்வளவு ப்ரியம். அவரது மரணமும் கூட அவருக்கு பிடித்தமான இடத்திலேயே பிரிந்தது. 
 
இந்நிலையில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 7ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காலை முதலே மக்கள் திரண்டு அஞ்சலியை காணிக்கையாக்குகின்றனர். 

newstm.in

Similar News