வீட்டுக்கு வெளியே குப்பைகள் கொட்டி வைப்பதாக மக்கள் தொடர்ந்து புகார் அளித்ததன் பேரில் பஞ்சாப் மாநில முதலமைச்சரின் இல்லத்திற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் உள்ளார்பஞ்சாப் மற்றும் அதன் அண்டை மாநிலமான ஹரியானாவிற்கு சண்டிகர் பொது தலைநகராக இருந்து வருகிறது. இதனால் இரு மாநில முதலமைச்சர்களின் இல்லம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களும் வசிப்பிடங்களும் சண்டிகரில் உள்ளன.

யூனியன் பிரதேசமாக இருந்தாலும் சண்டிகர் மாநகராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு மேயர் கவுன்சிலர் போன்றோர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியும், ஹரியானாவில் பாஜகவின் கூட்டணி ஆட்சியும் உள்ளன.

இந்நிலையில்,வீட்டிற்கு வெளியே குப்பைகளை கொட்டி வைத்த காரணத்திற்காக சண்டிகரில் உள்ள பஞ்சாப் முதலமைச்சர் வீட்டிற்கு பாஜகவைச் சேர்ந்த சண்டிகர் மாநகராட்சி கவுன்சிலர் மகேஷ்சின்தர் சிங் சித்து ரூ.10,000 அபராதம் விதித்துள்ளார்.

அப்பகுதி வாசிகள் தொடர் புகார்களை தெரிவித்து வருகின்றனர். பல முறை எச்சரித்தும் முதலமைச்சர் வீட்டின் ஊழியர்கள் குப்பை கொட்டுவதை நிறுத்தவில்லை என்பதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

இந்த புகாருக்கு பஞ்சாப் முதலமைச்சர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களில் முதலமைச்சரின் பாதுகாப்பு படையினர் தான் இருப்பதாகவும் இதற்கும் முதலமைச்சருக்கும் தொடர்பு இல்லை எனவும் கூறி புகாரை மறுத்துள்ளது.

newstm.in