ஓபிஎஸ் மகன் மீது நடவடிக்கை.. அச்சாரம் போட்டது ‘முரசொலி’..!
ஓபிஎஸ் மகன் மீது நடவடிக்கை.. அச்சாரம் போட்டது ‘முரசொலி’..!
‘ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விட்டு அவரது ஆட்சியை பாராட்டிப் பேசியது தவறு என்று சொன்னீர்களே, அப்படி இருக்கும்போது, ரவீந்திரநாத் மீது ஏன் நடவடிக்கை இல்லை..?’ என, ‘முரசொலி’ கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி’யில் வெளியான செய்தியில், ‘திமுக ஒரு தீயசக்தி… அதை அரசியலிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக எம்ஜிஆர் கட்சி தொடங்கினார்.
அந்த திமுகவை ஓ.பன்னீர்செல்வம் புகழ்ந்து பேசுகிறார். அவருடைய மகன் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விட்டு வந்து, அவரது செயல்பாடுகளின் சிறப்பை பற்றி பேசுகிறார்.
இவை எல்லாம் கட்சி விரோத நடவடிக்கைகள்’ எனக் கூறி, அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தையும், அவருக்கு துணையாக இருந்த வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் திமுகவையும், கருணாநிதியையும் புகழ்ந்து பேசியதால் அவரையும், சட்டமன்ற உறுப்பினர்களாக விளங்கும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி கூட்டம், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை ஏன் நீக்கவில்லை..?
ரவீந்திரநாத், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விட்டு அவரது ஆட்சியை பாராட்டி பேசியது தவறு என்று சொன்னீர்களே, அறிக்கைகள் வெளியிட்டீர்களே, ஓ.பன்னீர்செல்வத்தின் மீதான குற்றச்சாட்டுக்களில், அவரது மகன் முதல்வரை பாராட்டி பேசியதும் ஒன்றல்லவா..?
அப்படி இருக்கும்போது, ரவீந்திரநாத் மீது ஏன் நடவடிக்கை இல்லை..?, அவரை ஏன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வில்லை..?; எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்குமா..?’ என கேள்வி எழுப்பியுள்ளது.