இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை.. சாட்டையை சுழற்றும் ஐகோர்ட்..!

இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை.. சாட்டையை சுழற்றும் ஐகோர்ட்..!

Update: 2022-04-28 15:05 GMT

ஆக்கிரமிப்புகள் குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் சரியாக இருக்கும் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டடம், பங்களா, நூற்பாலை ஆகியவை கட்டியுள்ளதாகவும் அவற்றை மீட்குமாறு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் பி.டி. ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலத்தைக் கணக்கிடவும், ஆக்கிரமிப்பை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறிய இந்து சமய அறநிலையத்துறை, ஈரோட்டில் உள்ள கீழமை கோர்ட்டின் உத்தரவு தடையாக இருப்பதாக கூறியது.

இதன்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து பெரிய கட்டுமானம் செய்தது 3-வது நபர் கோர்ட்டுக்கு கொண்டு வந்த பிறகு தான் அறநிலையத்துறைக்கே தெரிய வருவது வேதனையளிக்கிறது என்று கூறினர்.

செயல்படாத அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடிக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆக்கிரமிப்பை அனுமதித்தவர்கள், தடுக்காதவர்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.

அத்துடன், ஆக்கிரமிப்புகள் குறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் சரியாக இருக்கும் என்று கூறி வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Similar News