விடை பெற்றது அக்னி நட்சத்திரம்! 11 இடங்களில் வெயில் சதம்!!
விடை பெற்றது அக்னி நட்சத்திரம்! 11 இடங்களில் வெயில் சதம்!!
அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தமிழகத்தில் இன்றுடன் நிறைவுபெற்றது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. அதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், அக்னி நட்சத்திரத்தில் இன்னும் அதிகமாக வெயில் பதிவாகக் கூடும் என மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது.
ஆனால் கத்திரி வெயில் தொடங்கியதும் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தது. ஆசானி புயல் மற்றும் வானிலை மாற்றம் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் அக்னி நட்சத்திர காலத்தில் மழை பெய்தது.
ஆனால் அதன்பிறகு வறண்ட வானிலை நிலவத் தொடங்கியது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான வெயில் பதிவாகி வருகிறது. இந்நிலையில், கடுமையான கத்திரி வெயில் இன்றுடன் விடை பெற்றது.
இந்த அக்னி நட்சத்திர காலத்தில் அதிகபட்சமாக கடந்த மே 6ஆம் தேதி வேலூரில் 105.98 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி அதைவிட அதிகமாக வேலூரில் 108 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. அக்னி நட்சத்திரம் இன்று விடைபெற்றுள்ள நிலையில், அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
newstm.in