இன்று முதல் அனைத்துப் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும்..!!
இன்று முதல் அனைத்துப் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும்..!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு நீதி கேட்டு நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தில்,வன்முறை வெடித்தது. பேருந்துகள்,வகுப்பறைகள் முழுவதுமாக அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. இதற்கு கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்தது. ஆனால், பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்திருந்தது. இருந்தபோதிலும் சில மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் இயங்கவில்லை..
இந்நிலையில், நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள DPI வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமாரை, தனியார் பள்ளிகள் சங்கக் கூட்டமைப்பினர் சந்தித்து பேசினர். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பு நிர்வாகிகள், “சம்மந்தப்பட்ட மாணவி மரணத்துக்கு யார் காரணம் என்பதைக் கண்டறிந்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே வேளையில் சக்தி மெட்ரிக் பள்ளியில் நடந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்று ஆணையரிடம் முறையிட்டோம். வன்முறையில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு இருப்பது போல், தனியார் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்” என்று தெரிவித்தார்.
அத்துடன் தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், இனி அனைத்துப் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என்று தனியார் பள்ளிகள் சங்கக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.