ஒதுக்கியது காங்கிரசுக்கு.. தலைவரானது திமுக.. காங்கேயத்தில் பரபரப்பு..!
ஒதுக்கியது காங்கிரசுக்கு.. தலைவரானது திமுக.. காங்கேயத்தில் பரபரப்பு..!
காங்கேயம் நகராட்சித் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளரை திமுக தலைமை அறிவித்திருந்த நிலையில், திமுக கவுன்சிலர் வெற்றி பெற்றுள்ளார்.
காங்கேயம் நகராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் திமுக-10, காங்கிரஸ்-1, அதிமுக-4, சுயேச்சை-3 ஆகிய வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தனர்.
இதையடுத்து, காங்கயம் நகராட்சித் தலைவர் பதவியை காங்கிரசுக்கு ஒதுக்கி திமுக தலைமை நேற்று (3-ம் தேதி) அறிவித்திருந்தது.
இந்நிலையில், நகராட்சித் தலைவர் பதவிக்கு நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு திமுகவைச் சேர்ந்த 1வது வார்டு உறுப்பினர் ந.சூர்யபிரகாஷ், காங்கிரசை சேர்ந்த 10வது வார்டு உறுப்பினர் ந.ஹேமலதா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதில், காங்கிரஸ் உறுப்பினர் ஹேமலதா வேட்புமனுவில் முன் மொழிபவர், வழி மொழிபவர் யாரும் இல்லாமல் தாக்கல் செய்ததால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, திமுகவைச் சேர்ந்த 1வது வார்டு உறுப்பினர் ந.சூர்யபிரகாஷ் நகராட்சித் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கேயம் நகராட்சித் தலைவர் பதவியை காங்கிரசுக்கு திமுக தலைமை ஒதுங்கியிருந்த நிலையில், அவர் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் திமுக உறுப்பினர் தலைவரான நிகழ்வு காங்கேயம் அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.