சட்டப்பேரவையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீது உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பதில் அளித்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார்வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிதாக ஆட்டோ வாகனம் வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும்.
இந்த வாரியத்தில் பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு நலத்திட்ட உதவித் தொகைரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும். இத்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி நலத்திட்ட உதவித் தொகையாக ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் படிப்புக்கு ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்து மரண உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இதில் உள்ள பெண் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மகப்பேறு நலத்திட்ட உதவித் தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்.
கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி நலத்திட்ட உதவித்தொகையாக ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் படிப்புக்கு ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் வழங்கப்படும் திருமண நலத்திட்ட உதவித்தொகை ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in