அமித் ஷா பதவி விலகவேண்டும்.. பாஜக மூத்த தலைவர் திடீர் போர்க்கொடி
அமித் ஷா பதவி விலகவேண்டும்.. பாஜக மூத்த தலைவர் திடீர் போர்க்கொடி
காஷ்மீரில் வெளிமாநில தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதேபோல் வெளிமாநிலத்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்றனர். நேற்று வங்கி மேலாளர் ஒருவர் வங்கிக்குள் புகுந்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வகையில் காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி உள்ளன. இதைப்போல ஆளும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமியும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும் நிலையில், தினமும் அங்கு ஒரு இந்து சுட்டுக்கொல்லப்படுகிறார். இதன் மூலம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக கோரும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. அவருக்கு இப்போதெல்லாம் கிரிக்கெட் மீது தேவையற்ற ஆர்வம் ஏற்பட்டிருப்பதால் உள்துறைக்கு பதிலாக விளையாட்டு அமைச்சகம் வழங்கலாம், என்று சாடியுள்ளார்.
பாஜகவின் பெரும் தலைவராக கருதப்படும் அமித் ஷா மீது கட்சி மூத்த தலைவர் ஒருவர் குற்றச்சாட்டு வைத்திருப்பது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.