அவசர சட்டம் அமல்படுத்துங்க.. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..!
அவசர சட்டம் அமல்படுத்துங்க.. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..!
“ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கு உடனடியாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்” என்று தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் சூதாட்ட அரக்கன் அடுத்த உயிரை பலி வாங்கியிருக்கிறான்.
இந்த உயிரிழப்பையும் சேர்த்து ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 11 மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.
ஆன்லைன் சூதாட்ட உயிர்ப்பலிகள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், தமிழக முதலமைச்சர் உறுதி அளித்தவாறு ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
ஒருவேளை, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன..?
வல்லுனர் குழு பரிந்துரைகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது..? என்பது குறித்தெல்லாம் தமிழக அரசு மக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அமைதியை கடைப்பிடித்து வருகிறது.
ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரிய சமூகக் கேடு ஆகும். உடனடியாக அந்தக் கேடு தடை செய்யப்படவில்லை என்றால் தமிழ்நாடு சமூக ரீதியாகவும், பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி சார்ந்தும் மிக மோசமான சீரழிவுகளை சந்திக்கும்.
அதற்கு தமிழக அரசு இடம் கொடுத்துவிடக் கூடாது. ஆன்லைன் சூதாட்டத்தின் அனைத்து தீமைகளையும் தமிழக அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது.
அதன்பிறகும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில் இரண்டாவது சிந்தனைக்கோ, தயக்கத்திற்கோ எவ்வகையிலும் இடம் தரக்கூடாது. ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்தின் இன்றைய நிலை குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.
அவசர சட்டம் இன்னும் தயாராகவில்லை என்றால், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்.
அதன்பின்னர் அதை ஆளுநருக்கு அனுப்பி, ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டத்தை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.