ரயிலில் இருந்து குதித்த ராணுவ வீரர் பலி.. காப்பாற்ற முயன்ற மகள் காயம் !
ரயிலில் இருந்து குதித்த ராணுவ வீரர் பலி.. காப்பாற்ற முயன்ற மகள் காயம் !
மகளை கல்லூரிக்கு வழியனுப்ப சென்றபோது கன்னியாகுமரி- பெங்களூர் ஐலண்டு எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி ராணுவவீரர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்த அலெக்ஸ் செபஸ்டியன் (62), முன்னாள் ராணுவ வீரர் ஆவார். அவரது மகள் அன்ஷா (21). அன்ஷா எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில், தனது மகளை, கன்னியாகுமரி- பெங்களூர் ஐலண்டு எக்ஸ்பிரஸ் ரயிலில் கல்லூரிக்கு அனுப்பிவைக்க அலெக்ஸ் செபஸ்டியன் சங்கனாச்சேரி ரயில் நிலையம் சென்றிருந்தார்.
ரயில் வந்ததும் அன்ஷா ஏறினார். அலெக்ஸ் மகளின் சூட்கேஸ், உடமைகளை எடுத்து ரயில் பெட்டிக்குள் கொண்டு வைத்தார். அப்போது திடீரென ரயில் புறப்பட்டது. அந்நேரம் அலெக்ஸ் செபஸ்டியனும் ரயிலில் இருந்துள்ளளார். சில வினாடிகளில் ரயிலின் வேகம் அதிகரித்தது. அப்போது இறங்க முடியாததால், ஓடும் ரயிலில் இருந்து அலெக்ஸ் கீழே குதித்தார். இதில் எதிர்பாராதவிதமாக பிளாட்பாரத்திற்கும்- ரயிலுக்கும் இடையே சிக்கி கொண்டார். இதனை பார்த்த அன்ஷா தந்தையை காப்பாற்ற ரயில் இருந்து குதித்தார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.
அப்போது கீழே உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் அலெக்ஸ் செபஸ்டியன் துடித்துடித்தார். இந்த தகவல் அறிந்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை மீட்டனர். படுகாயங்களுடன் தந்தை, மகள் ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக சங்கனாச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அலெக்ஸ் பரிதாபமாக இறந்தார். அவரது மகள் அன்ஷாவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் சங்கனாச்சேரி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
newstm.in