ஆருத்ரா மோசடி நிறுவனம் அல்ல... பணம் கட்டியவர்கள் திடீர் பல்டி!!
ஆருத்ரா மோசடி நிறுவனம் அல்ல... பணம் கட்டியவர்கள் திடீர் பல்டி!!
ஒரு லட்ச ரூபாய் கட்டினால் மாதம் 30,000 ரூபாய் வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய 26 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ. 3.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. 11 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா பெயரில் செயல்பட்டு வரும் 5 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குனராக பாஸ்கர் மற்றும் மோகன் பாபு ஆகிய இருவரை மட்டுமே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆருத்ராவின் நிர்வாக இயக்குனர் ராஜசேகர் என்பவர் நீதிமன்றத்தை நாடி முன் ஜாமின் வாங்கினார்.
ஏமாற்றப்பட்டவர்களுக்கு முடக்கம் செய்யப்பட்ட பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருவாய் துறை அதிகாரிகள் ஏமாற்றப்பட்டவர்கள் தங்களது விவரங்களை சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் வந்து அளிக்குமாறு தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ராஜரத்தினம் மைதானத்தில் 2000க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் விவரங்களை அளிப்பதற்காக குவிந்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் ஆர்.டி.ஓ தலைமையில் ஏமாற்றப்பட்ட நபர்களின் விவரங்களை திரட்டி டோக்கன் அளித்து வந்தனர்.
அப்போது, ஆருத்ரா நிறுவனம் தங்கள் வாழ்வை செழுமையாக்க வந்த நிறுவனம் எனவும் தேவையில்லாமல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தான் ஆருத்ராவை மோசடி நிறுவனம் எனக்கூறி பணத்தை முடக்கி உள்ளனர் என்றும் வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணத்தை திருப்பியளிக்க வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் பணம் கட்டிய மக்கள் ஆருத்ரா நிறுவனத்துக்கு ஆதரவாக பேசி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in