அசிங்கமா திட்டத் தோணுது.. கொந்தளிக்கும் திருநாவுக்கரசர்..!
அசிங்கமா திட்டத் தோணுது.. கொந்தளிக்கும் திருநாவுக்கரசர்..!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பாடப்பிரிவுக்கு நடத்தப்பட்ட பருவத் தேர்வில் சாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து, தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பாடப்பிரிவுக்கு நடத்தப்பட்ட பருவத் தேர்வில் சாதியை குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு ஊடகங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கேள்வி இடம்பெற்றது குறித்து உயர் கல்வித்துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டு அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை துறை மூலமாக எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், “இது போன்ற செயலால், மோசமான வார்த்தைகளால் திட்ட தோன்றுகிறது என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது; “ஜாதி ஒழிப்பிற்காக போராடிய பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில் இது போன்ற கேள்விகள் கேட்டு இருப்பவரை மோசமான வார்த்தைகளில் திட்டத் தோன்றுகிறது.
அந்த கேள்வி கேட்டவர்களை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.