பீர் பாட்டிலால் தலைமை ஆசிரியரை குத்த முயற்சி.. பிளஸ் 2 மாணவர் கைது..!
பீர் பாட்டிலால் தலைமை ஆசிரியரை குத்த முயற்சி.. பிளஸ் 2 மாணவர் கைது..!
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவர் தலைமுடியை ஒழுங்காக வெட்டாமல் பின்புறம் கொண்டை போட்டு வந்துள்ளார்.
இதைக்கண்ட தலைமை ஆசிரியர், அந்த மாணவரை தனது அறைக்கு அழைத்து கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், தலைமை ஆசிரியர் அறையில் சத்தம் போட்டுக் கத்தியதுடன், டேபிளில் இருந்த பொருட்களை கீழே தள்ளிவிட்டு உடைத்துள்ளார்.
சத்தம் கேட்டு வந்த மற்ற ஆசிரியர்கள், மாணவரை சமாதானப்படுத்தி, பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளனர். பெற்றோரை அழைத்து வரச் சென்ற மாணவர், வரும்போது காலி பீர் பாட்டிலை சட்டையில் மறைத்து எடுத்து வந்துள்ளார்.
மாணவர் செய்த செயலைப் பற்றி அவருடைய பெற்றோரிடம் தலைமை ஆசிரியர் சொல்லிக்கொண்டிருக்க, மறைத்துவைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து தலைமையாசிரியரை குத்த முயன்றிருக்கிறார் அந்த மாணவர்.
இதனால் பதறிப்போன தலைமையாசிரியர் சத்தம் போட, அருகிலிருந்த சக ஆசிரியர்கள் ஓடிவந்து மாணவரைப் பிடித்து அவர் கையிலிருந்த பாட்டிலை வாங்கினர்.
பயந்துபோன தலைமை ஆசிரியர் தனது அறையை உட்பக்கமாக பூட்டிக்கொண்டு, ஆத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். பள்ளிக்கு வந்த போலீசார் மாணவரை சமாதானப்படுத்தி பேசுகையில், ‘இப்படிப்பட்ட செயல்களில் ரெளடிகள்தான் ஈடுபடுவாங்க. நீ, படிக்கிற பையன்’ என்று சொல்ல, அதற்கு மாணவர், “நானும் ரெளடிதான் இப்ப என்ன பண்ணணும்” என்று எதிர்த்து பேசியுள்ளார்.
இதனிடையே, பள்ளி தலைமை ஆசிரியர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அந்த மாணவர் மீது வழக்குப்பதிவு செய்த ஆத்தூர் நகர போலீசார், மாணவரை கைது செய்தனர். மேலும், மாணவரை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.