தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் ஓடாது.. தொழிற்சங்கங்கள் அதிரடி அறிவிப்பு..!

தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் ஓடாது.. தொழிற்சங்கங்கள் அதிரடி அறிவிப்பு..!

Update: 2022-03-25 14:50 GMT

வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளன. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அத்துடன் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, விடுதலை சிறுத்தை, மதிமுக உள்ளிட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொள்வதால் பொது போக்குவரத்து பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் பெரும்பாலும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதால் பஸ்கள் முழுமையாக இயக்க முடியாத நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. ஆனால், பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையில், 28 மற்றும் 29-ம் தேதிகளில் தமிழகத்தில் ஆட்டோக்களும் ஓடாது என்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: “மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கு இணங்க தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து பேசி அன்றைய தினம் ஆட்டோக்களை இயக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதனால், தமிழகத்தில் 2 நாட்கள் அனைத்து ஆட்டோக்களும் ஓடாது. தமிழகத்தில் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. அதில், சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன.

தொழிலாளர் விரோத போக்கை கடைப்பிடிக்கும் மத்திய அரசை கண்டித்து பல இடங்களில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும் மறியல் போராட்டம் நடக்கிறது” என்று அவர் கூறினார்.

Similar News