பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் திமுகவின் பங்கு இருக்கிறது- பாஜக குற்றச்சாட்டு !!
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் திமுகவின் பங்கு இருக்கிறது- பாஜக குற்றச்சாட்டு !!
சென்னையில் தி.நகர் பகுதியில் உள்ள மாநில பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
3 மதுபாட்டில்கள் மூலம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக துணை ஆணையர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தியதில் வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டார். கைதான வினோத்திடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து காலை முதலே பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள், நிர்வாகிகள் குவிந்துள்ளனர். அந்த வகையில் பாஜகவை சேர்ந்த கராத்தே தியாகராஜன் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பாஜக அலுவலகம் மீது நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற சம்பவம் திமுகவின் பங்குடன் நடந்தது. பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் திமுகவின் பங்கு இருக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.
பெட்ரோல் குண்டு சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் செயலை கண்டிக்கிறோம். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற விஷயங்களுக்கு பாஜகவினர் பயப்பட மாட்டோம், இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, கைதான வினோத், பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். நீட் தேர்வுக்கு ஆதவராக பாஜக செயல்படுவதை எதிர்க்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கைதான வினோத் கூறியிருக்கார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in