தனது காருக்கு தானே தீ வைத்த பாஜக நிர்வாகி.. காரணம் என்ன தெரியுமா..?

தனது காருக்கு தானே தீ வைத்த பாஜக நிர்வாகி.. காரணம் என்ன தெரியுமா..?

Update: 2022-04-16 17:59 GMT

சென்னை, மதுரவாயல் கிருஷ்ணா நகர் ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளராக உள்ளார். இந்நிலையில், இவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவருடைய கார் தீப்பிடித்து எரிந்தது.

பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத ஒரு நபர் பெட்ரோலில் நனைத்த துணியால் காரின் நாலு பக்கமும் துடைத்து அதன் பிறகு காரை தீ வைத்து கொளுத்தும் காட்சி பதிவாகி இருந்தன.

இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக, சதீஷ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் சதீஷ்குமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, தனது காருக்கு தானே தீ வைத்ததாக ஒப்புக்கொண்டார்.

இந்த காரை விற்று நகை வாங்கித் தரும்படி அவரது மனைவி தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் காரை எரித்து விட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

அவர் மீது, தீப்பற்றக்கூடிய பொருட்களை மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தே மெத்தனமாக கையாளுதல் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Similar News