பாஜக நிர்வாகிகளால் இந்தியா மீது உலக நாடுகள் அதிருப்தி.. இந்திய தூதரகத்திற்கு சம்மன் !!

பாஜக நிர்வாகிகளால் இந்தியா மீது உலக நாடுகள் அதிருப்தி.. இந்திய தூதரகத்திற்கு சம்மன் !!

Update: 2022-06-06 16:57 GMT

கான்பூரில் வெடித்த மதமோதல் இந்தியாவில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், உலக நாடுகள் மத்தியில் தலைக்குனிவை உண்டாக்கியுள்ளது என்றே அரசியல் விமர்சகர்கள் பலரும் கூறுகின்றனர். இந்த மோதலுக்கு வித்திட்டது பாஜக நிர்வாகிகள் தான். கலவரத்தை நடத்தியது ஆர்எஸ்எஸ் என கூறப்படுகிறது. 

அதாவது, சமீபத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து அவதூறாக சில கருத்துக்களை கூறியிருந்தார். இதையடுத்து நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இங்கிருந்தே பிரச்சனை தொடங்கியது.

இதற்கிடையில், பாஜகவின் டெல்லி நிர்வாகியான நவீன்குமார் ஜிந்தால் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டது இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்தது. எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியதுபோன்று இருந்தது. இதன் விளைவாக உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மத மோதல் வெடித்தது. இதில் இஸ்மியர்கள் கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இருதரப்பினரும் மோதிக்கொண்டதில் பெரும் சேதம் ஏற்பட்டது.

இந்த பேச்சு அரபு நாடுகளிலும் எதிரொலித்து பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், டெல்லி பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பாஜக மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. 

இதனிடையே பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சி எனவும், எந்த மதத்தை அவமதிப்பதையும் ஏற்க முடியாது என பாஜக சார்பில் அறிக்கையும் வெளியிட்டு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் நபிகள் நாயகம் தொடர்பான சர்ச்சை கருத்து குறித்து உரிய விளக்கமளிக்க இந்திய தூதருக்கு கத்தார் சம்மன் அனுப்பியுள்ளது. இந்தியாவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர், இஸ்லாமிய மதம் பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்துள்ளனர். இதற்காக, இந்திய துாதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக கத்தார் அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கத்தாரை தொடர்ந்து ஈரான் மற்றும் குவைத் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் சம்பந்தப்பட்ட நாடுகளில் இயங்கி வரும் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 
 

newstm.in

Tags:    

Similar News