பாஜக தலைவர் ஏழுமலை.. கன்பியூஸ் ஆன இபிஎஸ்..!
பாஜக தலைவர் ஏழுமலை.. கன்பியூஸ் ஆன இபிஎஸ்..!
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10-ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராமநாதபுரம் மாவட்ட ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வேட்புமனு தாக்கலுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக சார்பில் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் ஆகிய இருவரும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இருவருக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் தங்கள் கட்சியினர் ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாது இரண்டு ராஜ்ய சபா உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
முன்னதாக, தனது பேச்சின் தொடக்கத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என்பதற்கு பதிலாக ஏழுமலை என மாற்றி பேசினார் எடப்பாடி பழனிசாமி.
உடனே அருகில் இருந்த கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் அண்ணாமலை என திருத்தவே, உடனடியாக தனது பேச்சை மாற்றி, “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை” எனக் கூறினார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.