கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்து, தொடர்புடைய பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது.

 இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை அடுத்து நேற்று பிற்பகல் மாணவியின் உடல், மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இந்த மறு உடற்கூறாய்வில் அரசு மருத்துவர்களுடன், மாணவியின் தந்தை மற்றும் அவர் தரப்பு வழக்கறிஞர் இருக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. ஆனால், மாணவியின் தந்தை நேற்றைய மறு உடற்கூறாய்வின்போது பங்கேற்கவில்லை. இதையடுத்து, நேற்று மாலை மறு உடற்கூறாய்வு முடிந்த நிலையில், மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ளுமாறு அவரின் வீட்டின் முன் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். நோட்டீசை பெற்றுக்கொள்ள மாணவியின் பெற்றோர் இல்லாததால் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி உடலை இன்று மதியம் 2 மணிக்குள் பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவி உடலை பெற்றுக்கொள்வதாக தகவல். உடலை பெற்று இன்றே மாணவிக்கு இறுதிச்சடங்கு நடத்த பெற்றோர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.