ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக பிடிவாரண்டு- நீதிமன்றம் உத்தரவு !!
ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக பிடிவாரண்டு- நீதிமன்றம் உத்தரவு !!
தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் ஆர்.கே.செல்வமணி. தமிழக திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவரான ஆர்.கே.செல்வமணி, பல்வேறு படங்களை இயக்கி புகழ்பெற்றவர். குறிப்பாக, புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி போன்ற படங்கள் இவரது இயக்கத்தில் வெளியான மெகா ஹிட் திரைப்படங்களாகும்.
இவரது மனைவியும் நடிகையுமான ரோஜா ஆந்திர அரசியலில் கலக்கி வருகிறார். நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். இந்த நிலையில், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சிக்கு கடந்த 2016ஆம் ஆண்டு பேட்டி அளித்தனர்.
அப்போது, பைனான்சியர் முகுந்த் சந்த போத்ரா குறித்து சில கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை போத்ரா தொடர்ந்தார்.
அவர் இறந்த பின்னர், இந்த வழக்கை அவரது மகன் ககன் போத்ரா நடத்தி வருகிறார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.செல்வமணி, அருள் அன்பரசு ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் தரப்பு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்கள் இருவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்து, விசாரணையை வருகிற 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
newstm.in