சென்னையில் இரு நாட்கள் ட்ரோன், பலூன்கள் பறக்கவிட தடை !
சென்னையில் இரு நாட்கள் ட்ரோன், பலூன்கள் பறக்கவிட தடை !;
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நாளை (ஜூலை 28) மாலை நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் மோடி பங்கேற்று போட்டியைத் தொடக்கி வைக்கிறாா். பின்னர் தமிழக ஆளுநா் மாளிகையில் தங்கும் பிரதமா் மோடி, மறு நாளான ஜூலை 29ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.
பிரதமா் வருகையையொட்டி, சென்னையில் கடந்த ஒரு வாரமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதியும், அசம்பாவித சம்பவங்களை தவிா்க்கும் வகையிலும், சென்னையில் இரு நாள்கள் (ஜூலை 28,29) டிரோன்கள்,சிறிய வகை ஆளில்லாத விமானங்கள்,பாரா சூட்டுகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல காற்று பலூன்கள், ‘கியாஸ்’ பலூன்கள் பறக்க விடுவதற்கும் தடை விதித்து, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன் கீழ் பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.
பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிட்டால் நடவடிக்கை என்ற வகையில் உத்தரவிடப்பட்டுள்ளது.அண்மையில், ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் சுதந்திர போராட்ட வீரா் அல்லூரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க பிரதமா் மோடி சென்றபோது, காங்கிரஸ் கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டனா். அந்த பலூன்கள் மோடி பயணித்த ஹெலிகாப்டா் மீது மோதுவது போல சென்றதால் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
இந்த காரணத்தால் சென்னையில் பலூன்கள் பறக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
newstm.in