பரபரப்பு.. 14 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் தீவிர விசாரணை..!
பரபரப்பு.. 14 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் தீவிர விசாரணை..!
கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாதேவபுராவில் கோபாலன் இன்டர்நேஷனல் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் வந்திருந்தது. அதில், ‘பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சக்தி வாய்ந்தது.
நீங்கள் சுதாரித்துக் கொண்டால் 100-க்கும் மேற்பட்டோர் தப்பித்துக் கொள்ளலாம். இந்த வெடிகுண்டு விவகாரத்தை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவியுங்கள். எல்லாம் உங்கள் கையில்தான் உள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளியின் ஊழியர், இதுபற்றி நிர்வாகத்திற்கும், மற்ற ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, பள்ளியில் இருந்த மாணவ - மாணவியர், ஆசிரியர்கள், ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் போலீசார் அந்த பள்ளிக்கு விரைந்து சென்றனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளியின் ஒவ்வொரு பகுதியையும் விடாமல் சோதனை செய்தனர்.
இதுபற்றிய தகவல் பரவியதும் மாணவ - மாணவியரின் பெற்றோரும் பதறியடித்துக் கொண்டு பள்ளிக்கு ஓடிவந்தனர். பள்ளி வளாகத்தில் நின்ற தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையில், மகாதேவபுராவில் உள்ள கோபாலன் இன்டர்நேஷனல் பள்ளியை போன்று, வர்த்தூரில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி, ஹெண்ணுரில் இருக்கும் செயின்ட் வின்சென்ட் பவுல் பள்ளி, மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள நியூ அகாடமி பள்ளி, கோவிந்தபுராவில் செயல்பட்டு வரும் இந்தியன் பப்ளிக் பள்ளி ஆகியவற்றுக்கும் இ-மெயில் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர்.
இதுதவிர பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் உள்ள ஹெப்பகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உஷ்கூரில் இருக்கும் எபினேசர் இன்டர்நேஷனல் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் வந்தது. இதுபோல், மேலும் 8 பள்ளிகளுக்கும் இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்திருந்தது.
இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வந்த 14 பள்ளிகளிலும் மாணவ - மாணவிகள், ஆசிரியர்கள், பிற ஊழியர்களை வெளியே அனுப்பி விட்டு வெடிகுண்டு நிபுணர்களும், போலீசாரும் சோதனை நடத்தினர்.
பல மணிநேரம் நடந்த சோதனையின்போது பள்ளிகளில் இருந்து எந்த விதமான வெடிகுண்டும் சிக்கவில்லை. இதனால், பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் வெறும் புரளி என்றும், மர்ம நபர்கள் யாரோ இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 14 பள்ளிகளும் தனியாருக்கு சொந்தமானதாகும். அந்த பள்ளிகளின் இ-மெயில் முகவரிக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பி வைத்திருந்தார்கள்.
இதன் மூலம் 14 பள்ளிகளுக்கும் ஒரே கும்பலே மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக பெங்களூரு போலீசார் மற்றும் ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.