பக்கிங்ஹாம் கால்வாயை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும்.. உயர்நீதிமன்றம் உத்தரவு !!

பக்கிங்ஹாம் கால்வாயை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும்.. உயர்நீதிமன்றம் உத்தரவு !!

Update: 2022-04-19 19:30 GMT

பக்கிங்ஹாம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை முழுமையாக பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 2014ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது கால்வாய்க்குள்ளும், கரையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், ஆக்கிரமித்தவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ரகுநாதன் தெரிவித்தார்.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது என்பது, ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றது என தெரிவித்த தலைமை நீதிபதி, ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரை உள்நாட்டு நீர்வழித்தடமாக இருந்த பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் முழுவதுமாக மோசமடைந்துள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, அதனை பழையபடி மீட்டெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
 
பக்கிங்ஹாம் கால்வாயை அழகுபடுத்தும் போது, நகரமும் அழகாகும் எனத் தெரிவித்த நீதிபதிகள், அதை தொடர்ந்து பராமரிப்பதில் மக்களுக்கும் பங்கு உள்ளது எனவும். தமிழகத்தில் பாரம்பரியங்கள் உள்ளன எனவும் நீதிபதிகள் பெருமை தெரிவித்தனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகள் நாளை விசாரணைக்கு வர உள்ளதால், இந்த வழக்கையும், அவற்றுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற அரசுத்தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணையை நீதிபதிகள், நாளைக்கு ஓத்திவைத்தனர். 

newstm.in

Similar News