ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர்களில் சிலர் உயிரிழந்ததாலும், பதவி விலகியதாலும் அந்த இடங்கள் காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதன்படி கிராமப்புறங்களில் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்கள் என்று 498 ஊரக உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன.

நகர்ப்புறங்களில் மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் என 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 30-ந்தேதி வரை ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் மொத்தம் 510 உள்ளாட்சி பதவிகள் காலியாக இருக்கின்றன.

இந்த காலியிடங்களுக்கான இடைத்தேர்தல் ஜூலை 9-ந் தேதி நடைபெறும் என்றும், 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, கடலூர் முதுநகர் அடுத்த சான்றோர்பாளையம் ஊராட்சியில், 9-வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த வார்டில் 4 பேர் போட்டியிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இந்த தேர்தலில் சான்றோர்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர், ஒருதலை பட்சமாக செயல்படுவதாக கூறி, இரு தரப்பு வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒருவருக்கொருவர் நெட்டித்தள்ளி கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த, கடலூர் டிஎஸ்பி கரிகால் பாரிசங்கர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். மேலும் ஒரு தரப்பினர் ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டிற்கு சென்று, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்கள் மீது, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரிடம் இருந்து மண்ணெய் கேனை பிடுங்கி இருவர் மீதும் தண்ணீர் ஊற்றினர். தொடர்ந்து அந்த பகுதியில் பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர், மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சான்றோர்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.