ஆந்திராவில் கலைக்கப்பட்டது அமைச்சரவை!!

ஆந்திராவில் கலைக்கப்பட்டது அமைச்சரவை!!

Update: 2022-04-08 08:40 GMT

2024ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு ஆந்திரப் பிரதேச மாநில அமைச்சரவையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முற்றிலும் மாற்றி அமைக்கவுள்ளார்.

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. ஜெகன் தனது ஆட்சியின் முதல் பாதி நிறைவடைந்த நிலையில், அடுத்து வரப்போகும் தேர்தலை கணக்கு வைத்து புதிய அமைச்சரவையை அமைக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இந்த அமைச்சரவை மாற்றம் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற வேண்டியது. கொரோனா பரவல் காரணமாக அது தள்ளிப்போனது. இந்நிலையில், கடந்த மாத இறுதியில் அமைச்சரவை மாற்றம் குறித்து பேசிய ஜெகன், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவே இந்த நடவடிக்கை என கூறியிருந்தார்.

பதவி இழக்கும் அமைச்சர்களுக்கு மாவட்ட அளவில் கட்சி பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெகனின் புதிய அமைச்சரவையில் சாதி மற்றும் மத ரீதியான உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

தற்போதைய அமைச்சரவையில் முன்னேறிய வகுப்பிலிருந்து 11 அமைச்சர்களும், ஓபிசி பிரிவிலிருந்து ஏழு அமைச்சர்களும், எஸ்சி பிரிவிருந்து 5 அமைச்சர்களும், எஸ்டி மற்றும் இஸ்லாமிய சமூகத்திலிருந்து தல ஒரு அமைச்சரும் உள்ளனர்.

இதே கணக்கில்தான் புதிய அமைச்சரவை பிரதிநிதித்துவம் இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். முன்னதாக ஆந்திராவில் 13 மாவட்டங்கள் இருந்துவந்தது. அதை டபுளாக்கும் விதமாக புதிதாக 13 மாவட்டங்களை உருவாக்கி, மாநிலத்தில் மொத்தம் மாவட்டங்கள் எண்ணிக்கை 26ஆக உயர்த்தி முதலமைச்சர் ஜெகன் உத்தரவிட்டுள்ளார்.

newstm.in

Similar News