மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் ரத்து?
மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் ரத்து?
பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் ரத்து செய்யப்படும் என்று தகவல் வெளியான நிலையில், திட்டம் ரத்து செய்யப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படாது. ஆனால் லேப்டாப் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன என்றார்.
திமுக தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என்று கூறியிருந்தோம். ஆனால், மடிக்கணினி வழங்குவது தான் சிறந்தது என அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே, அரசு பள்ளிகளில் மீண்டும் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், இதுவரை அரசு பள்ளிகளில் 7 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கூடுதலாக ஒரு தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்கிற அரசாணை 149ஐ ரத்து செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முதல்வர் அலுவலகத்திடம் அது குறித்து முடிவெடுக்கப்படும். பள்ளிகளில் மாணவர்கள் செயின் கயிறு உள்ளிட்டவை அணிவது குறித்து வெளியான அறிவிப்பு ஏற்கனவே பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படும் அறிவிப்புகளே என கூறினார்.
கொரோனா பாதித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளதாக தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ், முதல்வர் குணமடைந்து திரும்பிய பின்னர் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், மிதிவண்டி வழங்கும் திட்டம் ஆகியவற்றை தொடங்கிவைப்பார் என கூறினார்.
newstm.in