உயர்ந்தது சிமென்ட் விலை.. வீடு கட்டுவோர் அதிர்ச்சி..!
உயர்ந்தது சிமென்ட் விலை.. வீடு கட்டுவோர் அதிர்ச்சி..!
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டும் சிமென்ட் விலை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உயர்ந்து வருகிறது. இங்குள்ள சிமென்ட் நிறுவனங்கள், தங்களுக்குள் பேசி வைத்து சிமென்ட் விலையை அவ்வப்போது உயர்த்தி வருகின்றன.
சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு சிமென்ட் விலை மூட்டைக்கு 60 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இதனால், அரசு மற்றும் தனியார் கட்டுமான திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டது.
முதல்வர் ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சிமென்ட் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், மூட்டைக்கு 50 ரூபாய் வரை குறைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது சிமென்ட் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த வார நிலவரப்படி முதல் தர சிமென்ட் சில்லறை விலை ஒரு மூட்டை 380 ரூபாயாக இருந்தது; தற்போது அது 450 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது குறித்து இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராமபிரபு கூறியதாவது: “ஒரே வாரத்தில் சிமென்ட் விலை மூட்டைக்கு 70 ரூபாய் உயர்ந்துள்ளது. மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் சிமென்ட் விலை உயர்த்தப்படுகிறது.
தமிழக அரசு சிமென்ட் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, சிமென்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, உக்ரைன் போரை காரணமாகக் கூறி டிஎம்டி கம்பிகள் விலை, மின்சார இணைப்பு, பிளம்பிங் பொருட்களின் விலையும் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.