வீட்டு உரிமையாளர்களுக்கு ‘செக்’.. இனி, வாடகைதாரரிடம் அதிக கட்டணம் வசூலிக்க முடியாது..!
வீட்டு உரிமையாளர்களுக்கு ‘செக்’.. இனி, வாடகைதாரரிடம் அதிக கட்டணம் வசூலிக்க முடியாது..!
குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாகவும், மற்ற வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும் மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இது தவிர, 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோரிடம், மானிய விலையில் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதற்கு மேல் சென்றால் மட்டும் முழு கட்டணம். இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்திற்காக ஆண்டுக்கு, 3,650 கோடி ரூபாய் செலவாகிறது. இந்த தொகையை, மின் வாரியத்திற்கு மானியமாக தமிழக அரசு வழங்குகிறது.
இதனிடையே, மின் பயன்பாட்டில் பல முறைகேடுகள் நடக்கின்றன. சொந்த வீடுகள் வைத்திருக்கும் பலர், இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கும் மின்சாரத்திற்கு வாடகைதாரர்களிடம் இருந்து பணம் வசூலிக்கின்றனர்.
தனி சமையல் அறையுடன் கூடிய ஒரு வீட்டிற்கு, ஒரு மின் இணைப்பு வழங்க வேண்டும். விதிப்படி கூடுதல் தளங்கள் கட்டி இருந்தால், கூடுதல் மின் இணைப்பு வழங்கப்படும்.
ஆனால் பல வீடுகளில், ஒரே வீட்டில் குறைந்த மின் கட்டணம் வருவதற்காக, ஏசி அறைக்கு ஒரு மின் இணைப்பு, மோட்டார் பம்புக்கு ஒரு இணைப்பு என பல மின் இணைப்புகள் வைத்துள்ளனர். இதனால், மின் வாரியத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க, நுகர்வோரிடம் இருந்து 'ஆதார்' எண் பெற்று, அவர்களின் மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரியத்தினர் கூறியதாவது: ‘அரசு இலவசமாக வழங்கும் 100 யூனிட் மின்சாரத்திற்கு வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்களிடம் யூனிட்டிற்கு 10 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
ஏற்கனவே மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. எனவே, மின் நுகர்வோரிடம் ஆதார் எண் பெற்று, அவர்களின் மின் இணைப்பு எண்ணுடன் இணைத்தால் முறைகேடு தடுக்கப்படும்.
அத்துடன், ஒரே பெயரில் பல மின் இணைப்பு பெற்றிருப்பதும் தெரியவரும். அதன் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், அரசுக்கும் செலவு குறையும். அதனால் மிச்சமாகும் தொகையில், புதிய மின் திட்டங்களை செயல்படுத்தலாம்’ எனத் தெரிவித்தனர்.