முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் ஆஸ்திரேலியா பயணம்.. முதலீடுகளை ஈர்க்க திட்டம் !
முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் ஆஸ்திரேலியா பயணம்.. முதலீடுகளை ஈர்க்க திட்டம் !
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். தற்போது அதற்கான வேலைகளையும் அவர் தொடங்கிவிட்டார். அவருக்கு உடந்தையாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொழில் முதலீடுகளை ஈர்த்து வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் பணியை தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மேற்கொண்டு வருகிறார்.
கடந்த மாத இறுதியில் துபாய் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறு நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தங்கள் மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேலும் சில நாடுகளுக்கு அவர் செல்ல இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் அடுத்ததாக ஸ்டாலின் ஆஸ்திரேலியா சென்று தொழில் முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு தொடர்பாக IndAus ECTA என்ற முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியத் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஆஸ்திரேலிய தொழில்துறை அமைச்சர் டான் டெஹான் ஆகியோர் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
காணொலி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் தொடர்ச்சியாக மூன்று முதலமைச்சர்கள் ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த லிஸ்டில் முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பெயர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் ரீதியாகவும் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
newstm.in