டில்லிக்கு நிகராக சென்னையில்.. அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்..!
டில்லிக்கு நிகராக சென்னையில்.. அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்..!
கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் ஏற்கனவே 8 ஏக்கர் நிலப்பரப்பில் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. தற்போது, மேலும் 4 ஏக்கர் பரப்பில் 6 தளங்களுடன் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கட்டடம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிண்டியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக இந்த மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.