மீனவர்களை விடுதலை செய்யக்கோரி முதலமைச்சர் கடிதம்!!
மீனவர்களை விடுதலை செய்யக்கோரி முதலமைச்சர் கடிதம்!!;
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கைக்கோரி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில், கடந்த 20.07.2022 அன்று ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 92 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளதாகவும் அவற்றில் சில படகுகள் 2018 ஆம் ஆண்டில் சிறைபிடிக்கப்பட்டதால் அவை முற்றிலும் சேதம் அடையக்கூடும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
படகின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி அவர்களது படகிற்கான உரிமையைக் கோர வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்றும் தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக அவர்களால் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கை. கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இந்திய அரசின் உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை கோருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கையில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மீன்பிடிப் படகின் உரிமையாளர்கள், இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தாம் வலியுறுத்துவதாகவும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இக்கடிதத்தில், கடந்த சில மாதங்களில் கைது செய்யப்பட்ட 18 மீனவர்களை சொந்த நாட்டுக்கு அழைத்துவர உதவியதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
newstm.in