சித்ரா தற்கொலை வழக்கு.. ஹேம்நாத்துக்கு எதிராக நெருங்கிய நண்பர் வழக்கு !!
சித்ரா தற்கொலை வழக்கு.. ஹேம்நாத்துக்கு எதிராக நெருங்கிய நண்பர் வழக்கு !!
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். சித்ரா மரணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யபட்டார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது நண்பர் சையத் ரோஹித் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். சித்ரா மரணம் தொடர்பாக ஹேம்நாத்க்கு எதிராக அவரது நண்பரே திரும்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சையத் ரோஹித் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, ஹேம்நாத் தனது நீண்டகால நண்பர். அவர் மூலம் சித்ராவை தமக்கு நன்றாக தெரியும். சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து காவல்துறை விசாரணையின்போது சாட்சியம் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். ஹேம்நாத்தின் மற்ற நண்பர்கள் சாட்சியம் அளிக்க மறுத்த நிலையில் தாம் மட்டுமே சாட்சியம் அளித்ததாகவும் இதற்காக ஹேம்நாத் தம்மை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் சையத் ரோஹித் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
ஹேம்நாத்தால் தம்முடைய குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தன்னுடைய பணம் மற்றும் அடியாட்களின் பலத்துடன் சாட்சிகளை மிரட்டி வருவதாகவும் அவரை வெளியே சுதந்திரமாக நடமாடவிட்டால் சாட்சிகளை கலைப்பார் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். உயர் நீதிமன்ற ஜாமீன் நிபந்தனைகளை மீறி ஹேம்நாத் செயல்பட்டு வருவதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இதுதொடர்பாக ஹேம்நாத், சித்ராவின் தந்தை மற்றும் காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஏற்கனவே சித்ரா வழக்கில் அவரது மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. சித்ரா மரணத்துக்கு பின்னால், முன்னாள் அமைச்சர் ஒருவர் இருப்பதாகவும், பலரின் தலைகள் இதில் உருளும் எனவும் கூறப்படுகிறது.
newstm.in