நாளை இரு வேளைகளில் தேர்வு.. அந்த 45 நிமிடங்கள்.. அதிர்ச்சியில் உறைந்த தேர்வர்கள் !!
நாளை இரு வேளைகளில் தேர்வு.. அந்த 45 நிமிடங்கள்.. அதிர்ச்சியில் உறைந்த தேர்வர்கள் !!
தமிழ்நாட்டில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அரசு பணியில் சேருவதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்தப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நாளை (பிப்.20) நடைபெறுகிறது. ஒவ்வொரு பாடம் வாரியாக நாளை காலை, மதியம் என 2 வேளைகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
காலையில் நடக்கும் தேர்வுக்கு காலை 7.30 மணிக்குள்ளும், மதியம் நடைபெறும் தேர்வுக்கு 12.30 மணிக்குள்ளும் மாணவர்கள் தேர்வு எழுதும் மையத்தில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், தேர்வு தொடங்குவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக தேர்வு மையத்தின் கதவு மூடப்படும் எனவும், எந்த ஒரு சூழ்நிலையிலும் தேர்வு மையம் மாற்றி தரப்படாது என்றும் தேர்வு வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விண்ணப்பித்துள்ள பலருக்கு சொந்த மாவட்டங்களை தவிர்த்து வேறு மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஓதுக்கப்பட்டு உள்ளதால் தேர்வர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தேர்வர்கள் சிலர் கூறியதாவது, தென்காசி மாவட்டத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு தேர்வு மையம் அமைக்கப்படவில்லை. 200 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு காலை 7.30 மணிக்கு செல்ல உத்தரவிட்டுள்ளார்கள். இது மிகவும் மன உளைச்சலை தரும் வகையில் உள்ளது. பெண் தேர்வர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. எனவே உடனடியாக அந்தந்த மாவட்டங்களுக்குள் மையங்களை ஒதுக்கி, தேர்வர்களுக்கு நுழைவுச்சீட்டு வெளியிட வேண்டும், இவ்வாறு தேர்வர்கள் கூறினர்.
newstm.in
.