குடி மையமாக மாறிய வகுப்பறை.. தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்..!
குடி மையமாக மாறிய வகுப்பறை.. தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்..!
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மணலி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சஞ்சய் காந்தி.
இவர், வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் மது அருந்துவது, சுருட்டு புகைப்பது போன்ற போதைப் பழக்கங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். தலைமை ஆசிரியரின் இந்த அருவருக்கத்தக்க செயலால் மாணவர்கள் பலர் பள்ளிக்கு வருவதை தவிர்த்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடமும் முறையிட்டுள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், பள்ளியை தொடர்ந்து குடி மையமாக பயன்படுத்தி வந்த தலைமை ஆசிரியர் சஞ்சய் காந்தி நேற்று வழக்கம்போல் மது பாட்டிலுடன் பள்ளிக்கு வந்துள்ளார். இதுகுறித்து மாணவர்கள் அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளியை முற்றுகையிட்ட கிராம மக்கள், மது பாட்டிலுடன் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியரை கையும் பாட்டிலுமாக பிடித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே பள்ளிக்கு விரைந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மது போதையில் இருந்த அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.
அதனால், டாக்டரை பள்ளிக்கு வரவழைத்து தலைமை ஆசிரியருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர் மது அருந்தி இருப்பது உறுதியானது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தரப்பில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதும், மாணவர்களின் நல்லொழுக்கத்தை கெடுக்கும் விதமாக பள்ளியில் மது அருந்தி, புகை பிடித்தற்காகவும் பள்ளியின் தலைமை ஆசிரியரை திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.