கல்லூரி மாணவி தற்கொலை.. உருக்கமான கடிதம் சிக்கியது..!
கல்லூரி மாணவி தற்கொலை.. உருக்கமான கடிதம் சிக்கியது..!;
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் ராஜலிங்க புரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (53). இவருடைய மகள் பாப்பா (18).
இவர், நெல்லை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி. பட்டப் படிப்பில் சேர்ந்தார். இதற்கான கட்டணம் 12 ஆயிரம் ரூபாயை முத்துக்குமார் இரண்டு தவணைகளாக செலுத்தினார்.
முத்துக்குமார் எலக்ட்ரீசியன் வேலை பார்த்த போதிலும் குடும்ப செலவுக்கு போதிய பணம் இன்றி தவித்தார். ஆனாலும், மகள் படிப்பிற்காக மிகுந்த சிரமப்பட்டு பணத்தை ஏற்பாடு செய்து கல்லூரியில் செலுத்தியதாக கூறப்படுகிறது. தனது படிப்பு செலவுக்காக பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு பணம் செலுத்தியதை பார்த்து பாப்பா மன வேதனை அடைந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முத்துக்குமார் தனது மனைவியை அழைத்துக்கொண்டு களக்காட்டில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த பாப்பா, துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரத்திற்கு பின்னர் வீடு திரும்பிய முத்துக்குமாரும், அவரது மனைவியும் கதவு உள்புறமாக பூட்டி இருந்ததை பார்த்துள்ளனர். பின்னர், குச்சியால் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பாப்பா தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், பாப்பாவின் கைப் பையை சோதனை செய்தனர். அதில், அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், ‘எனது படிப்பு செலவுக்காக பெற்றோர்களை சிரமப்படுத்தி விட்டதால் தற்கொலை செய்ய முடிவு எடுத்தேன்’ என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.