ஸ்ரீமதி மரணம் குறித்து வாட்ஸ்அப் குழுவில் வதந்தி பரப்பிய கல்லூரி மாணவர்கள் கைது..!!
ஸ்ரீமதி மரணம் குறித்து வாட்ஸ்அப் குழுவில் வதந்தி பரப்பிய கல்லூரி மாணவர்கள் கைது..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு பயின்று வந்தவர் பள்ளி மாணவி ஸ்ரீமதி.
இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி காலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்து, தொடர்புடைய பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது.
இது தொடர்பாக திண்டுக்கல்லை அடுத்துள்ள ஜிடிஎன் கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் உதயகுமார் மற்றும் பார்வதி கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயதுடைய மற்றொரு கல்லூரி மாணவன் ஆகியோர் சேர்ந்து JusticeSrimathi என வாட்ஸ்அப் குழு ஒன்றை துவங்கியுள்ளனர்.
மேலும் இறந்த மாணவியின் புகைப்படத்தை வாட்ஸ்அப் குழு டிபியில் வைத்துள்ளனர். மாணவியின் மரணம், போராட்டம் தொடர்பாக பல வதந்திகளை இருவரும் அக்குழுவில் பரப்பி வந்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் கல்லூரி மாணவர்கள் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.