திருடனை விரட்டிப் பிடித்த கல்லூரி மாணவிகள்.. நேரில் அழைத்து போலீஸ் கமிஷனர் பாராட்டு..!
திருடனை விரட்டிப் பிடித்த கல்லூரி மாணவிகள்.. நேரில் அழைத்து போலீஸ் கமிஷனர் பாராட்டு..!
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் தீபலட்சுமி (19); கல்பாக்கத்தைச் சேர்ந்தவர் காயத்ரி (19). இவர்கள் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர். அத்துடன், இருவரும் தடகள வீராங்கனைகள்.
இந்நிலையில், கடந்த 8-ம் தேதி மாலை இவர்கள் விளையாட்டு பயிற்சிக்காக பெரம்பூருக்கு மின்சார ரயிலில் சென்றனர். பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கு பின்னால் நடந்து வந்த ஒருவர், காயத்ரியின் செல்போனை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து மாணவிகள் இருவரும் செல்போன் திருடனை துரத்தத் தொடங்கினர். சிறிது தூரத்தில் திருடனின் கூட்டாளி பைக்கில் தயாராக நின்று கொண்டிருந்திருக்கிறார்.
அதைக் கவனித்த மாணவிகள், “திருடன், திருடன்” என்று சத்தம் போட்டபடி வேகமாக விரட்டினர். மாணவிகள் சத்தம் போட்டுக்கொண்டே ஓடுவதைப் பார்த்த பொதுமக்கள், ஓடிக்கொண்டிருந்த செல்போன் திருடனை சுற்றிவளைத்தனர்.
அப்போது, மாணவிகளின் பிடியில் திருடன் சிக்கிக்கொண்டான். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் அவனிடமிருந்த செல்போனை மீட்ட மாணவிகள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பெரவள்ளூர் போலீசார், செல்போனை பறித்த வழக்கில் கார்த்திக் மற்றும் அவரின் கூட்டாளி சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில், காயத்ரி மற்றும் தீபலட்சுமியின் துணிச்சல் மிகுந்த இந்த செயலை கேள்விப்பட்ட சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.