செஸ் ஒலிம்பியாட் விழாவை புறக்கணிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் !!

செஸ் ஒலிம்பியாட் விழாவை புறக்கணிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் !!;

Update: 2022-07-28 06:29 GMT

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் வகையில் இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. பிரதமர் மோடி இன்று தொடங்கிவைக்க உள்ளார்.

இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தில் நடத்திட தமிழக முதல்வர் மேற்கொண்ட முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் காங்கிரஸ் பேரியக்கம் பாராட்டி நன்றி தெரிவிக்கிறது, வாழ்த்துகிறது.

அதேநேரத்தில் நாட்டில் உள்ள வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, பாதுகாப்பு அச்சுறுத்தல், ஆபத்தான அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, முறையற்ற ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியது, கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பது, தன்னாட்சி பெற்ற அமலாக்கத்துறை, சி.பி.ஐ, மத்திய வருமானவரித்துறையை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்துவது, தமிழகத்திற்கு எதிரான நீட் தேர்வில் பிடிவாதமாக இருப்பது, தமிழக ஆளுநரை தமிழர் நலன் சார்ந்த கொள்கைகளுக்கு எதிராக பேச வைப்பது, தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய சட்டமன்ற மசோதாக்களுக்கு அங்கீகாரம் அளிக்காமல் இருப்பது, மக்களவையிலும், மாநிலங்களவையிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்தால் ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரான வகையில் அவர்களை சஸ்பெண்ட் செய்வது போன்ற மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு துணை போகின்றது மத்திய அரசு.

ஜனநாயகத்திற்கு எதிராகவும், எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் வகையிலும் செயல்படும் பாஜக அரசின் கொள்கைகளை எதிர்த்து பிரதமர் மோடி துவங்கி வைக்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்வுகளை தமிழக சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம். இந்த புறக்கணிப்பு ஜனநாயகத்திற்கு விரோதமான அரசை நடத்தும் பிரதமர் மோடிக்கு எதிரானதுதானே தவிர செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எதிராக அல்ல!,  என அவர் கூறி உள்ளார்.

newstm.in
 

Similar News