குட்டிக்கரணம் அடித்து காங்கிரஸ் போராட்டம்!
குட்டிக்கரணம் அடித்து காங்கிரஸ் போராட்டம்!
கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் குட்டிக்கரணம் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுச்சாமி தலைமையில் குட்டி கரணம் அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கோரிக்கை மனுவினை கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தார். அந்த மனுவில் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப் பெரிய நகரம் கோவில்பட்டி. தீப்பெட்டி, கடலைமிட்டாய் ,நூற்பாலை, விவசாயம் என பல்வேறு தொழில்களை கொண்ட நகரம்.
அது மட்டுமல்லாது பல வரலாற்று சிறப்பியல்புகளை கொண்ட நகரம் கோவில்பட்டி. பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு இருக்கிறது.
இப்பகுதியில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு கோவில்பட்டியை தலைமையிடமாக வைத்து கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்.
இது இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் போது கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும் வளர்ச்சி பெறும்.
அது மட்டுமல்லாது அரசின் நிர்வாக வசதிக்கும் எளிதாக இருக்கும். எனவே தமிழக அரசு கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். இது அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு.
மேலும் கடந்த 14 ஆண்டுகளாக இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள அனைத்து அரசு துறைகளையும் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் இளையரசனேந்தல் குறுவட்டத்தினை தென்காசி மாவட்டத்துடன் இணைக்க எடுக்கும் முடிவினை அரசு கைவிட வேண்டும். இளையரசனேந்தல் குறு வட்டத்தின் அனைத்து துறைகளையும் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
newstm.in