சர்ச்சை! ரேஷன் கடையில் பிரதமர் படத்தை மாட்டிய அண்ணாமலை!!
சர்ச்சை! ரேஷன் கடையில் பிரதமர் படத்தை மாட்டிய அண்ணாமலை!!
கோவையில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோல்டுவின்ஸ் துரைசாமி நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடை முன்பு மத்திய அரசின் இலவச அரிசி திட்டம் குறித்து பொது மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது நியாய விலை கடைக்குள் சென்ற அவருக்கு அக்கட்சியினர் சால்வை அணிவித்தனர். பின்னர் நியாயவிலை கடையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை சுவரில் தொங்கவிட்டு சென்றார்.
ஏற்கனவே நியாயவிலை கடையில் கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகைபடங்கள் இருந்த நிலையில் தற்போது பிரதமர் மோடியின் புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்த பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பாஜக ஆதரவாளர் ஒருவர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்ததற்காக, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆலாந்துறை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
இதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க முயன்றும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நியாயவிலைக் கடைக்குள் நுழைந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in