நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல் புகாரை, சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4, 800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும், இதுகுறித்து 2018இல் முதலமைச்சராக இருந்த ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பாக, 2018 அக்டோபர் 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த வழக்கு கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது ஆர்.எஸ். பாரதி தரப்புக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும், அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீதான சிபிஐ விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்திருந்தது நினைவுக்கூரத்தக்கது.

newstm.in